கவிதை எழுதத் தொடங்கி
கழுதையில் முடிந்தது...

கடுகு பற்றி யோசித்தால்
மலை வருகிறது;

அவனுக்கு ‘ம்ம்’ என்கிறேன்
அவளோடு உரைக்கிறேன்;

நாயும் பன்றியும் கேவலமென்றால்
நீ யார் என்கிறது அகம்;

அலிகளைப் பார்க்கையில் பயக்கிறேன்
ஏன்? விடையில்லை;

சாக்கடையைத் தாண்டுகையில் கறையில்லா
கரை வேட்டியைச் சிந்திக்கிறேன்;

குழந்தையின் பாதத்தை முத்தமிட்டு
ரசித்துச் சிலிர்க்கிறேன்;

பால்காரனுக்கும் பஞ்சுமிட்டாய் விற்பவனுக்கும்
வயதாகிக்கொண்டே போகிறது;

ஓடைக்குள் கிடக்கும் உடைந்த சங்கு
எதைத்தேடி காத்திருக்கிறது;

விண்மீனா மின்மினியா பெரிது
பற்றி ஐயம் எழுகிறது;

புத்தகத்தின் மொந்தையை விழுங்கிச்
செரிக்கும் கரையானாக ஆசைக்கிறேன்;

துளையில்லா புல்லாங்குழல் வாங்க
தேடித்தேடி ஓடிஓடி களைக்கிறேன்;

இப்படியாக-
கவிதை எழுதத் தொடங்கி
கழுதையில் முடிந்தது...












கருத்துகள்

சுருதி இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை👏🏻👏🏻👏🏻

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரததாயின் துயர் களைதல்