வாகன சக்கரத்தில் ஊசலாடும் மானுட சந்ததி
சாலையில் -
தலை நசுங்கி
பின்னங்கால்கள் பரத்தி
குப்புறக் கிடக்கும்சொறித்தவளை;
வயிறு அறுந்து
பசிய முட்டை சிதறி
வெறித்த கண்ணோடு
கிடக்கும் ஓணான்;
சரிந்த குடலோடு
மீசை மயிர்கள் காற்றாட
நாறிக் கிடக்கும் பெருச்சாளி;
தரையோடு தரையாய்
தாரோடு தாராய்
நீளுடல் சிதைந்து
நைந்துக் கிடக்கும்
பாம்பு குட்டி;
தேர்ந்தவனின் ஓவியமாய்
சுவடாகிக் கிடக்கும்
அட்டைப் பூச்சி ;
வரிசையாகவே செத்துக்
கிடக்கும் சிற்றெறும்புகள்;
இந்த-
எளிய உயிர்கள்
ஒரு நாள்
சாலையைக் கடக்கக் கற்கும்.
பின்-இப்
பரந்த பூமியில்
அதன் சந்ததிகள்
மட்டுமே
உயிர் வாழும்...
•••

கருத்துகள்